Header Top Ad
Header Top Ad

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டம் துவக்கம்- கோவையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்!!!

கோவை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை துவங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனை வளாவளாகத்தில் செயற்கை கருத்தரிப்பு மையம், மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம், பச்சிளங் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு மையம் ஆகியவற்றை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் முதல்வர் துவக்கி வைத்த வளர்ச்சி குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சோமோட்ரான் எனப்படும் மருந்துகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் சிறப்பு கண்ணொளி திட்டத்தின் கீழ் 50 பேருக்கு இலவச கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

Advertisement

Single Content Ad

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 9.65 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது, இதுவரை இல்லாத அளவிற்குப் பல புதிய கட்டமைப்புகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்து உள்ளது மேற்கு மண்டல மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதன் காரணமாக நாள்தோறும் வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை 2,500-லிருந்து 5,000 ஆக அதிகரித்து உள்ளது என்றும் புற்று நோயை துல்லியமாகக் கண்டறியும் நவீன ஸ்கேன் கருவி முன்னதாக சென்னை, மதுரை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் புதிய கருவிகள் நிறுவப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். நான்கு இடங்களில் இக்கருவிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனறும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் உலக அளவில் அதிகரித்து வரும் சூழலில், தனியார் மருத்துவமனைகளில் ரூ.10-12 லட்சம் செலவாகும் இச்சிகிச்சை, தற்போது சென்னை எழும்பூர் மற்றும் சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ரூ.4-5 லட்சம் செலவில் பரிசோதனை முறையில் தொடங்கப்பட்டு உள்ளது. உலக அளவில் 15% தம்பதியினர் கருத்தரித்தலில் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், 15 பெண்களில் ஒருவருக்கு கருப்பைக் குறைபாடு கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தச் சூழலில், முதல் முறையாக கோவையில் முதல் நிலை கருத்தரித்தல் மையம் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு 180 தாய்மார்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இருவர் கருவுற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வளர்ச்சி மருந்து வழங்கும் திட்டம், முதல் கட்டமாக13.25 கோடி மதிப்பீட்டில் கோவையில் தொடங்கப்பட்டு உள்ளது என்றும் இது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும், தமிழ்நாட்டில் கோவையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் 5 வாரத்திற்கு தேவையான மருந்துகள் ஐஸ் பெட்டியுடன் வழங்கப்பட உள்ளது. இதன் மதிப்பு 60 ஆயிரம் ஆகும் என்றார்.

மேலும், சாலைகளில் பாதுகாப்பின்றி ஆதரவற்று இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ வசதி அளிக்கும் திட்டம் 16 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் இத்திட்டம் படுக்கை வசதிகளுடன் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் மனிதநேய நடவடிக்கையாகத் தொடங்கப்பட்டு உள்ளாக தெரிவித்தார். நீட் தேர்வு மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர் நீட் தேர்வைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான செய்திகள் உள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து தீர்வு காண்பதற்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் 1,35,716 பேர் பங்கேற்றதில், 76,181 மாணவர்கள் தகுதி பெற்று உள்ளனர். நாடு முழுவதும் முதல் 100 இடங்களுக்கும் ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மாநிலத்திற்குப் பெருமை என்றார். நீட் மதிப்பெண் அடிப்படையில் விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் பணியிடங்கள் பற்றிய கேள்விக்கு,
சிறுவாணி பகுதியில் உள்ள மூன்று மலைக் கிராமங்களுக்கு 15-16 கிலோ மீட்டர் நடந்தே சென்று மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளோம்.

முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ஒருவர் விபத்தில் காயம் அடைந்த போது, இத்திட்டம் மலை கிராமங்கள் வரை சென்று உள்ளதை வெகுவாகப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மருத்துவத் துறையில் பற்றாக்குறை இல்லாமல் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும், மேலும் 9,000 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

கோவையில் வசிக்கும் திருநெல்வேலி மாணவி நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி தொடர்பான கேள்விக்கு, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்..

Recent News

Single Sidebar Ad

Latest Articles