கோவை: தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் அகில இந்திய வேலை நிறுத்தத்தை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகளுக்காக கொண்டு வந்துள்ள சில சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், விவசாய விதை மசோதா மற்றும் மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மருத்துவ திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திரண்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்கள் அனைத்துமே தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என தெரிவித்துள்ள அவர்கள் எனவே மத்திய அரசு உடனடியாக இவற்றை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து பேசிய HMS தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ராஜாமணி 50 கார்ப்பரேட் முதலாளிகளுக்காகவே மோடி அரசாங்கம் ஆட்சி செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். தனியார் நிறுவனத்திற்கு 27 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஆனால் விவசாயிகளின் ஒரு பைசா கூட தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு கல்வி கடன் கொடுக்கப்படும் பட்சத்திலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை என தெரிவித்த அவர் அதனால் மாணவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாவதாக தெரிவித்தார். அணு ஆயுத சட்டத்தால் இந்த நாடு இருக்குமா அல்லது அழிந்து போகுமா என்ற அச்சமும் நிலவுவதாக தெரிவித்த அவர் எனவே மத்திய அரசு உடனடியாக புதிய சட்டங்களை ரத்து செய்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காத்திட வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்ட மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

