கோவை: கோவையை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவரது கணவர் பாலாஜி. சங்கீதா கடந்த 6 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கணவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் வாடகை வீட்டில் இருந்து வந்த நிலையில் மாதம் 15,000 ரூபாய் வருமானத்தைக் கொண்டு இரு மகன்களையும் படிக்க வைத்து வருகின்றனர். தற்போது ஒரு மகன் கல்லூரியில் பயின்று வருகிறார். மற்றொரு மகன் பள்ளியில் பயின்று வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 2.10 லட்சம் பெற்று கூடுதலாக மாவட்ட கூட்டுறவு வங்கியில் இருந்து கடன் பெற்று வீடு கட்டி உள்ளனர். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் மூலம் இவர்களின் வீடானது கட்டப்பட்டுள்ளது.
மேலும் சங்கீதா மத்திய அரசின் PMAY BLC திட்டத்தின் பயனாளியாக இருந்து வரும் நிலையில் அவரது உழைப்பையும் நம்பிக்கையையும் கருத்தில் கொண்டு இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து குடியரசு தின விழா அன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் பேரணியை இவர் நேரில் காணவும் குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்திலும் கலந்து கொள்வதற்காகவும் அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ள சங்கீதா, அனைத்து பெண்கள் கடினம் பாராமல் உழைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும் குடியரசு தலைவருக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டுள்ளார்.

