கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அண்ணா பல்கலையில் உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் தனது உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர்களின் சலுகைகளை மறுத்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கோவை வடவள்ளி அருகே உள்ள அண்ணா பல்கலையில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் ஏற்கனவே இரண்டு முறை தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று மூன்றாவது முறையாக மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில்,
எங்கள் நியாயமான கோரிக்கைகள் மற்றும் சலுகைகளை சென்னை அண்ணா பல்கலை நிர்வாகம் மறுத்து வருகிறது. பல்கலையின் முடிவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. கடந்த 2009 முதல் நிலுவையில் உள்ள CAS பதவி உயர்வுகள் சீரானதன்மை (Uniformity) இல்லை. உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கும் சமமான சலுகைகளை நீட்டிக்க வேண்டும். சம்பள உயர்வுகள், அனைத்து ஓய்வூதிய சலுகைகளும் ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பாரபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.
இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

