கோவை: கோவையில் மின்சார கம்பியில் சிக்கி சுமார் 3 வயது மதிக்கத்தக்க மயில் உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்காக கோவை வனத்துறையினர் உயிரிழந்த மயிலை எடுத்துச் சென்றனர்.
கோவை துடியலூர் கணுவாய் சாலையில் உள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில், சாலையை கடக்க பறந்து வந்த மயில் ஒன்று அவ்வழியாக சென்ற மின்சார கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி சாலையில் விழுந்தது.
இதைப் பார்த்து அவ்வழியாக வந்த ராமலிங்கம் என்பவர், மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மயிலை மீட்டு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்தார். ஆனால், சிறிது நேரத்தில் மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் ராமலிங்கம் மயிலை ஒப்படைத்தார். மயிலை ஆய்வு செய்த வனத்துறையினர், அதற்கு சுமார் 3 வயது இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, இறப்பிற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனைக்காக மயிலை எடுத்துச் சென்றனர்.

