கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், கோவையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், பொதுமக்கள் இடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் காவல் துறையினரின் அடையாள அணிவகுப்பு (Flag March) இன்று நடைபெற்றது.

பாதுகாப்புப் படையினரின் வருகை
தேர்தல் பணிகளுக்காகத் தமிழகத்திற்கு ஏற்கனவே 50 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் (CAPF) ஒதுக்கப்பட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரப் பகுதிகளுக்கு வந்து உள்ள மத்திய துணை ராணுவப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), விரைவு அதிரடிப்படை (RAF) மற்றும் தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் படை என மொத்தம் 150 வீரர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பில் தெற்கு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு சீரநாயக்கன்பாளையத்தில் இருந்து வடவள்ளி வரை சுமார் 2.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.
இதில் வீரர்கள் தங்களின் நவீன ஆயுதங்களுடன் சீருடையில் அணிவகுத்துச் சென்றது அப்பகுதி மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
கோவையில் கண்டறியப்பட்டு உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க இந்த வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள். தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களுடன் இணைந்து இவர்கள் வாகனச் சோதனையிலும் ஈடுபடுவார்கள். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, முக்கியப் பகுதிகளில் இவர்கள் தினசரி ரோந்துப் பணிகளை மேற்கொள்வார்கள்.

