கோவை:பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் 2300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் 2300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநகரில் 1300 போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என மாவட்டம் முழுவதும் 2300 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால் மற்றும் கடைவீதி பகுதிகளில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
இதேபோன்று காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது தவிர கோவை ரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


