கோவை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கியுள்ள நிலையில் கோவையில் 38,390 மாணவ மாணவிகளும் 1237 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை இத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 159 தேர்வு மையங்களில் 509 பள்ளிகளைச் சார்ந்த 18861 மாணவர்கள் மற்றும் 19529 மாணவிகள் என மொத்தம் 38390 மாணாக்கர்களும் 1237 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
இத்தேர்விற்காக 11 மந்தணக்கட்டுக்காப்பு மையங்களில் 22 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்புடன் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதமேந்திய காவலர்கள் உதவியுடன் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தேர்வுமையங்களுக்கு சென்றடையவும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுக்காப்பான முறையில் விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இத்தேர்விற்க்காக 159 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 159 துறை அலுவலர்கள் 2075 அறைக் கண்காணிப்பாளர்கள், 250 நிலையான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் 316 அலுவலக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அரசு தேர்வுகள் இயக்கக வழிகாட்டு நெறிமுறையின்படி 946 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) பணியில் 946 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

