கோவை: கோவை அவினாசி சாலையில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஜெகநாதன் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ஸ்ரீதரன் (வயது 20). இவர் கோவை பீளமேட்டில் அறை எடுத்துத் தங்கி, அங்குள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பயின்று வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல தனது பைக்கில் கல்லூரிக்குச் சென்றார். கல்லூரி முடிந்ததும் மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது வாகனம் பீளமேடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, சங்ககிரியில் இருந்து கோவை நோக்கி வந்த கொண்டிருந்த அரசு பேருந்து ஸ்ரீதர் பைக் மீது மோதியது.
இதில் தூக்கியெறியப்பட்ட ஸ்ரீதரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக, கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பேருந்து ஓட்டுனர் சேலம் எடப்பாடி ரெட்டிபட்டியை சேர்ந்த ராஜ்குமார் (44) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.