கோவை: தனது ஆட்டோவில் பயணி தவற விட்ட ஒரு பவுன் தங்க பிரேஸ்லெட்டை, அதன் உரிமையாளரிடம் வீடு தேடிச் சென்று ஒப்படைத்த கோவை ஆட்டோ டிரைவர் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கணபதி பாரதி நகரைச் சேர்ந்தவர் கௌசல்யா சீனிவாசன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் 100 அடி சாலையில் உள்ள கடைக்குச் செல்வதற்காக ஆட்டோவை வாடகைக்கு அழைத்துள்ளார்.
அப்போது சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது ஆட்டோவில் அவர்களை காந்திபுரம் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வீடு திரும்பினார்.
காந்திபுரத்தில் இருந்து வீடு திரும்பிய கௌசல்யா, தனது கையில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கப் பிரேஸ்லெட் காணாமல் போனதைக் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுக்க அந்த பிரேஸ்லெட்டை தேடிப்பார்த்தும்கிடைக்கவில்லை.
ஆட்டோ டிரைவர்
இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் தனது வாகனத்தைச் சுத்தம் செய்த போது, இருக்கையின் ஓரத்தில் அந்த பிரேஸ்லெட் கிடப்பதைப் பார்த்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையிலும், அந்த நகையின் மீது ஆசைப்படாமல், உடனடியாக சக ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்துக் கொண்டு கௌசல்யாவின் வீட்டிற்கே நேரடியாக சென்றார்.
அங்கு தனது நகையைத் தொலைத்து விட்டுத் தவித்துக் கொண்டு இருந்த கௌசல்யா சீனிவாசன் குடும்பத்தினரிடம், அந்தப் பிரேஸ்லெட்டை பத்திரமாக ஒப்படைத்தார்.
தங்களது வாழ்வாதாரத்திற்காகக் கடுமையாக உழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களில், மணிகண்டன் போன்ற நேர்மையான மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது கோவை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லவர்கள் கூடும்போது…
சமீபத்தில் சென்னையில் குப்பையில் கிடந்த நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளரின் செயல் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், கோவையில் நகையை உரியவரிடம் ஒப்படைத்த மணிகண்டனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

