கோவை: 25வது முறையாக இ – மெயில் மூலம் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவ்வாறு கோவை சர்வதேச விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், கோர்ட், தனியார் கல்லூரி ஆகிய இடங்களுக்கு அடிக்கடி மிரட்டல் விடுத்து இ – மெயில் அனுப்பி வருகின்றனர்.
இதில் கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் 25வது முறையாக இ-மெயில் மூலம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய மற்றும் புதிய கட்டிடத்தின் அலுவலகங்கள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எந்த பொருட்களும் கைப்பற்றபடவில்லை. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வழக்கம் போல புரளி என்பது தெரியவந்தது.

