கோவை: கோவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Electronic Voting Machine) வாக்குப் பதிவுசெய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு முக்கிய அரசு அலுவலகங்கள் கடந்த மின்னணு வாக்குபதிவு (Electronic Voting Machine) செயல்முறை விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், கோவை பாரத ஸ்டேட் வங்கி சாலையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இம்மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி எவ்வாறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படுகிறது என்பதைக் காணலாம்.
மேலும், வாக்காளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நடமாடும் வாகனம் வீதம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மைய வாகனங்களும் விழிப்புணர்வு பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.
எனவே, பொதுமக்கள் இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையத்தினை பயன்படுத்தி, வாக்களிக்கும் முறை மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

