கோவை:கோவையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் செலவு அதிகரிப்பு காரணமாக ஓட்டல்களில் தோசை, சப்பாத்தி, பொங்கல் உள்ளிட்ட உணவுகளின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு, ஓட்டல் உரிமையாளர்கள் கடும் கவலையில் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் பெரிய ஓட்டல்கள், 25 ஆயிரம் சிறிய உணவு விற்பனை கடைகள், 50 ஆயிரம் டீக்கடைகள் மற்றும் பேக்கரிகள் உள்ளன. இங்கு தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும்.
இந்த நிலையில் தற்போது ஓட்டல்களில் உணவு விலை கடந்த 12ம் தேதி முதல் உயர்ந்துவிட்டது. தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா, பூரி, போன்றவற்றின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்து விட்டது.
இதற்கு ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் காரணம் என்றும், இந்தியாவிற்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக கடைகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர் விநியோகம் பாதிப்பு என காரணம் கூறப்படுகிறது.
வழக்கமாக கடைகளுக்கு வணிக சிலிண்டர்கள் புக்கிங் செய்த மறுநாள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதை புக்கிங் செய்த பிறகு பல நாட்கள் தாமதம் ஆகிறது.
இந்த தட்டுப்பாட்டால் சிலிண்டர் விளையும் உயர்ந்துவிட்டது. இதை சமாளிக்க ஓட்டல் உரிமையாளர்கள் விலையை உயர்த்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் உணவு பொருள் விலை அதிகரித்து உள்ளது.
உணவுப் பொருள் விற்பனை விலை அதிகரிப்பால் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று சாப்பிடுவதை குறைத்து விட்டனர். வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் முன்பு ஓட தினமும் உணவு அருந்தி வந்தனர். தற்போது விலை உயர்ந்து விட்டதால் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதை குறைத்து விட்டனர்.
இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விலையை சமாளிக்க உணவுப் பொருள் விலையை கூட்டிய ஓட்டல் உரிமையாளர்கள் விற்பனை பாதிப்பால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். செலவு அதிகரிப்பதால் ஊழியர்களை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

