கோவை: அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தினால் பைக் பறிமுதல் செய்யப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இதன் காரணமாக நகரில் ஏற்படும் நெரிசலை குறைக்க யு-டர்ன், சிக்னல் இல்லா ரவுண்டானா உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிலர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்படுவதும் விபத்துக்கும் வழி வகுக்கிறது. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி ஏர் ஹார்னை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஒரு சில இளைஞர்கள் தங்களது பைக்கில் சைலன்சர் வடிவமைப்பை மாற்றி அதிக சத்தம் தரக்கூடிய சைலன்சரை பொருத்தி ஓட்டுகின்றனர்.
இதுபோன்று சத்தத்துடன் பைக் ஓட்டி செல்லும் போது, முன்னே சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து நிலை தடுமாறும் நிலை உள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கோவை விழாவில் ஏராளமானோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பைக் பேரணியில் கலந்து கொண்டனர். இதனை கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் துவக்கி வைத்தார்.


அப்போது பேரணியில் கலந்து கொண்ட ஒரு பைக்கில் அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்தது. இதனை கவனித்த அவர் இது போன்ற சைலன்சர்களை யாரும் பயன்படுத்த கூடாது.
இனி வரும் பேரணிகளில் இது போன்று அனுமதிக்காதீர்கள். பைக்கில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தினால் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.


