கோவை: கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில், பணத்துக்காக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிப் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கல்வி மையமாகத் திகழும் கோவையில், கல்லூரி மாணவிகளே சக மாணவிகளை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டி உள்ள விவகாரம் பெரும் பரபரப்புப் ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் இரண்டு மாணவர்கள், அதே கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவிகளைக் காதலித்து வந்து உள்ளனர்.
இந்த நான்கு பேரும் அடிக்கடி ஊர் சுற்ற நினைத்த போது, அதற்குப் போதிய பணம் இல்லாததால் ஒரு வில்லத்தனமான ஸ்கெட்ச் போட்டு உள்ளனர்.
அதன்படி, தங்கள் கல்லூரியிலேயே பயிலும் வசதி படைத்த மாணவிகளின் புகைப்படங்களைச் சேகரித்து, அவற்றை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் பறிக்க அந்த மாணவர்கள் பிளான் செய்து உள்ளனர்.
இந்த திட்டத்திற்குத் தங்களது காதலிகளையும் உதவியாகச் சேர்த்துக் கொண்டது தான் ஹைலைட்.
ஆரம்பத்தில் இந்தத் திட்டத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இரண்டு காதலி மாணவிகள், பின்னர் காதலர்களுக்காகத் தங்கள் தோழிகளுக்கே துரோகம் செய்யத் துணிந்து உள்ளனர்.
இதற்காக அவர்கள் கல்லூரியில் உள்ள வசதி படைத்த வீட்டுப் பெண்களிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்து, நெருங்கிய தோழிகளாக மாறி அவர்களது புகைப்படங்களையும், செல்போன் எண்களையும் நைசாக வாங்கி உள்ளனர்.
பின்னர் அந்தத் தகவல்களை தங்களது காதலர்களிடம் கொடுக்க, அந்த மாணவர்கள் புகைப்படங்களை ஆபாசமாகச் சிதைத்து சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கே அனுப்பி மிரட்டல் கொடுத்து உள்ளனர்.
“கேட்கும் பணத்தைக் கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிடுவோம்” என மிரட்டியதால், பயந்து போன அந்த மாணவிகள் முதற்கட்டமாகப் பணம் கொடுத்து உள்ளனர்.
தொடர்ந்து வந்த டார்ச்சரால் பொறுமை இழந்த பாதிக்கப்பட்ட மாணவிகள், துணிச்சலுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடனடியாகக் களமிறங்கிய சூலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட மாணவர்களைப் பிடித்து விசாரணை செய்த போது தான் இந்த ஒட்டுமொத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
காதலிகளின் உதவியுடன் அரங்கேறிய இந்தச் சீப் பிளான் போலீஸாரையே அதிர வைத்தது.
இறுதியில், அந்த மாணவர்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த காதலி மாணவிகளைப் பிடித்துக் காவல் துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
கல்வி கற்கும் இடத்தில் இத்தகைய சைபர் கிரைம் சம்பவங்கள் அதிகரிப்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

