கோவை: கோவை அருகே எஸ்ஐயை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கோவை அருகே சூலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வாசல் முன்பு கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி தினேஷ்குமார் (20) என்ற கல்லூரி மாணவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேர், தினேஷ்குமாரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்ய முயன்றனர்.
அங்கிருந்தவர்கள் ஒன்று கூட, அவர்கள் தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்து சென்றவர்கள் காமநாயக்கன்பட்டியில் உள்ள பங்கில் பெட்ரோல் நிரப்பினர். அங்கிருந்தும் பணம் கொடுக்காமல் தப்பி சென்றனர். அவர்களை துரத்திய பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பி சென்றனர்.
பிடிபட்ட வாலிபரை சூலூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவுதம் (20) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மற்ற சிலரை தேடி வந்தனர். இவர்கள் கும்பலாக கோவை வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பதை வாடிக்கையாக கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று மாலை சூலூர் அப்பநாயக்கன்பட்டி புதூரில் ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சூலூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில், எஸ்ஐ யுவராஜ் உள்பட போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில் அவர்கள் வழிப்பறி கும்பல் என தெரியவந்தது.
இதனையடுத்து அப்பநாயக்கன்பட்டி புதூர்-பாம்பம்பட்டி சாலையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 3 பேர் தப்ப முயன்றனர். போலீசார் மடக்கி பிடிக்கையில், அங்கிருந்த ஒருவர் எஸ்ஐ யுவராஜை அரிவாளால் வெட்டினார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் தற்காப்புக்காக யுவராஜ் துப்பாக்கியால் சுட்டதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த பாலமுருகன் (24) என்பவனுக்கு வலது காலில் குண்டு பாய்ந்தது. வலியால் துடித்த அவரையும், மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து சுட்டுப்பிடிக்கப்பட்ட பாலமுருகன் மற்றும் அரிவாள் வெட்டில் காயமடைந்த எஸ்ஐ யுவராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவையில் வழிப்பறி கொள்ளையன் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



