கோவை: சுயஉதவிக்குழு பெண்கள் வசூலித்த கடன் பணத்தை திருப்பி அடைக்காமல் ரூ.30 லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே தனியார் டிரஸ்ட் உள்ளது. கடந்த 16 வருடங்களாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் தொழில் தொடங்குவதற்காக கடன் தொகை வழங்கப்படுகிறது. அந்தத் தொகையை மகளிர் சுய உதவி குழுவினர் மாதா மாதம் நிறுவனத்திற்கு திருப்பி செலுத்தி வருவார்கள்.
இதற்காக மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் பணம் வசூல் செய்ய ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அங்கு பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வந்த பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முனிராஜா என்ற ஊழியர் 65 குழுவிடம் பணத்தை வசூலிக்கும் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டு இருந்தார்.
குழுவில் உள்ள பெண்களிடம் பணத்தை வசூல் செய்த அவர் அதை நிறுவனத்தின் பெயரில் வங்கியில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுய உதவி குழு பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அந்த நிறுவனத்திடம் சுய உதவி குழு பெண்கள் புகார் செய்தனர்.
மொத்தம் 30 லட்சம் ரூபாய் மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் வசூலித்த பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் முனிராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

