கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று மகளிர் நீதிமன்றத்தில் பூட்டிய அறையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தபட்டது.
கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் அவர்களது உறவினர் மதுரையை சேர்ந்த தவசி ஆகியோர் கோவை துடியலூர் அருகே கீரணத்தம் பகுதியில் பதுங்கி இருந்த போது போலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டனர். பின்னர் மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கருப்பசாமி மற்றும் தவசி ஆகியோருக்கு போலீசார் சுடப்பட்டதால் ஏற்பட்ட காயம் குணம் அடைந்த நிலையில் காளீஸ்வரன் மற்றும் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. எனவே மத்திய சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சிந்து முன்னிலையில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட சூழலில் வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 9 ம் தேதி 200 பக்கத்திற்கு போலீசாரால் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மொத்தம் 270 பக்கத்திற்கான கூடுதல் குற்றப்பத்திரிகையை பீளமேடு காவல் நிலைய போலீசார் மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
இதற்காக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குற்றவாளிகளான கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
நீதிமன்றத்தில் பூட்டிய அறையில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரிடமும் தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

