கோவை: கோவையில் பெண்ணிடம் ஆன்லைன்மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தை நடத்திவந்த ஒரு பெண்ணுக்கு, செல்போனில் குறுந்தகவல் வந்தது. பங்கு மார்க்கெட்டில் அதிக லாபம் பெற்று தருவதாகவும், முதலீடு செய்யுமாறும் அதில் தெரிவித்தனர்.
இதனைப்பார்த்து தொடர்பு கொண்ட, கோவை பெண்ணிடம் தாங்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறும், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி பல்வேறு தவணைகளாக அந்த பெண், ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தார். அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, லாபத்தையும், அசல் தொகையையும் திரும்பி தராமல் மோசடி செய்துவிட்டனர்.
இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதேமோசடி ஆசாமிகள் தென்காசி, திருச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், ஆந்திர மாநிலம் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.
இதைதொடர்ந்து தென்காசி சைபர் கிரைம் போலீசார் ராஜு (வயது41), திருவள்ளூர், முகமது அனீப்(44), அவருடைய மனைவி அன்னு (34) ஆகியோரை கைது செய்தனர். கோவையிலும் மோசடியில் ஈடுபட்டதால், கோவை போலீசார் தென்காசிக்கு சென்று 3 பேரயும் கோவை அழைத்து வந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தியபின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


