கோவை: தேமுதிக-திமுக இடையே கூட்டணி உறுதியான நிலையில் கோவையில் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஒரு சேர இணைப்பு விழா நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கூட்டணியில் தேமுதிக முதன்முறையாக இணைந்துள்ளது. கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த முடிவை எடுத்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும், இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு தேமுதிக பகுதி கழகத்தின், 26வது வட்டக் கழகம் சார்பில் தேமுதிக-திமுக இணைப்பு விழா நடைபெற்றது.
தேமுதிகவின் கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சிங்கை சந்துரு தலைமையில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.கோவிந்தராஜ், பீளமேடு பகுதிக் கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், 26வது வட்டக் கழகச் செயலாளர் சிட்டி கே.ராமச்சந்திரன் மற்றும் பீளமேடு பகுதி மகளிர் அணி செயலாளர் சிட்டி ஆர்.அழகுராணி ஏற்பாட்டில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.

இதில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, திமுக 27வது வட்டக் கழக பொறுப்பாளர் பி.டி.முருகேசன், உக்கடம் நரசிம்மன் கோவில் அரங்காவலர் குழு தலைவர் மனோகரன், தேமுதிக பீளமேடு பகுதி பொருளாளர் கோழிக்கடை தேவராஜ், 26வது வார்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.வெங்கடேசன். ஆர்.பி.எஸ்.முருகேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கட்சிகள் இணைந்ததைக் கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து 26வது வட்டக் கழகச் செயலாளர் சிட்டி கே.ராமச்சந்திரன் கூறுகையில், “எங்கள் கூட்டணி மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. அனைவரும் இணைந்து மக்களைச் சந்தித்து, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் வெற்றிக்காகப் உழைப்போம். பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியபடியே, 200க்கும் மேற்பட்ட இடங்களை எங்கள் கூட்டணி வெல்லும்.” என்றார்.

