கோவை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளில் என்னென்ன கவனிக்க வேண்டியவை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேர்தல் நடத்தை விதிகள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், அரசின் சார்பில் புதிய திட்டங்கள் அறிவிப்பது, புதிய நிதி ஒதுக்கீடுகள் செய்வது, அடிக்கல் நாட்டுதல், திறப்பு விழாக்கள் நடத்துதல் போன்றவை தடை செய்யப்படும். குறிப்பாக, வாக்காளர்களை கவரும் வகையில் இலவசங்கள், பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவது விதிமீறலாகும்.
அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகளாக உள்ளவர்கள், அரசு வாகனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அதிகாரப்பூர்வ பதவியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி வாக்கு கேட்பதும் விதிமுறை மீறலாக கருதப்படும்.
அதேபோல், அரசு செலவில் விளம்பரங்கள் வெளியிடுதல், அரசின் சாதனைகளை முன்னிறுத்தும் பேனர்கள், ஹோர்டிங்ஸ், விளம்பர பலகைகள் அமைத்தல் ஆகியவை கூடாது.
அரசு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்கள் அகற்றப்படும்.
தேர்தல் ஆணையம் பறக்கும் படை, கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மூலம் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பை தொடங்க உள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மூடப்படும்.
சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.
அரசியல் கட்சிகளுக்கு
மதம், ஜாதி, மொழி அடிப்படையில் வாக்கு கேட்பது, எதிர்க்கட்சிகளை தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வது, வெறுப்புணர்வு ஏற்படுத்தும் பேச்சுகள் பேசுவது போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
ஒலிபெருக்கி பயன்பாடு, பொதுக்கூட்டம், பேரணி நடத்துதல் உள்ளிட்ட அனைத்திற்கும் முன் அனுமதி பெறுவது அவசியம்.
வாக்காளர்களை கவரும் நோக்கில் இதுபோன்ற பொருட்கள் வழங்கப்படுவது தேர்தல் குற்றமாக கருதப்படும். யாராவது இதுபோல் வழங்கினால் உடனடியாக தேர்தல் அதிகாரிகள் அல்லது பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் சுற்றளவில் பிரசாரம் செய்யக்கூடாது. கட்சிக்கொடி, சின்னம், துண்டுப்பிரசுரம், வேட்பாளர் பெயர் சொல்லி வாக்கு கேட்பது போன்றவை வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி அருகே தடை செய்யப்பட்டவை.
அதேபோல், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வாகனங்களில் ஏற்றி இறக்கி அழைத்துச் செல்வதும் சட்டவிரோதமாக கருதப்படலாம். தேர்தல் விதிகளின்படி வாக்காளர்களை கூட்டிச் செல்லும் ஏற்பாடுகள் மீது கண்காணிப்பு இருக்கும்.
வாக்காளர்களுக்கான விதிகள்
பொதுமக்கள் ரூ.50,000க்கும் மேல் பணத்தை கொண்டு செல்லும் போது உரிய ஆவணம் இருக்க வேண்டும்.
ஆவணங்கள் இல்லையென்றால் அந்த பணத்தை பரிமுதல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது.
வாக்குக்காக பணம், பரிசுப்பொருள், இலவச கூப்பன், மதுபானம், சலுகை பொருட்கள் போன்றவை யாரிடமிருந்தும் பெறக்கூடாது.
இதுபோன்ற புகார்களை C-Vigil ஆப் மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரம் ‘மௌன காலம்’ என்பதால், அந்த நேரத்தில் பிரசார கூட்டங்கள், வாக்கு கேட்கும் அழைப்புகள், தீவிர பிரசார வாகனங்கள், மொபைல் மெசேஜ் பிரசாரம் போன்றவை கூட செய்யக்கூடாது.

