கோவை: கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் ரசாயன பசை தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் ரசாயன பசை தயாரித்த தொழிற்சாலைகக்கு அறிவுசாரா சொத்துரிமை பாதுகாப்பு குழுவினர் சீல் வைத்துள்ளனர்.
பி.வி.சி குழாய் உள்ளிட்ட பொருட்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரசாயன பசையை பிரபல நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக ரசாயன பசை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அறிவுசாரா சொத்துரிமை பாதுகாப்பு குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வணிக புகார்களை விசாரிக்கும் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அக்குழுவினர் கோவை பீளமேடு ஸ்ரீராம் நகரில் தேஜா ராம் என்பவர் நடத்தி வந்த அந்த தொழிற்சாலையில் சோதனை நடத்தினர்.

இதில் பிரபல நிறுவனப் பெயரை பயன்படுத்தி போலியாக ரசாயன பசை உள்ளிட்ட பொருள்கள் தயாரிப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு ஏராளமான அட்டைப் பெட்டிகளில் இருந்த ரசாயன பசை கைப்பற்றப்பட்டது. மேலும் போலி முத்திரைகள் உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரு நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி பசை பொருட்களை தயாரித்து, சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், சந்தைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் தேஜா ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

