கோவை: கோவையில் உள்ள புக் ஸ்டாலில் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் (25). இவர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் புக் ஸ்டால் நடத்தி வருகிறார்.
இவர் நேற்று வழக்கம் போல கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த நபர் தான் நிருபர் என்றும், ரூ. 5 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரவீன் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்றுள்ளார். அதற்கு அந்த நபர் பணம் தரவில்லை என்றால் உனது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி விற்பதாக, தனது நாளிதழில் எழுதி விடுவேன் என்று தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடைக்காரரை மிரட்டிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அந்த நபர் ரத்தினபுரி, வ.உ.சி வீதியைச் சேர்ந்த பிரபு (48) என்பதும், அவர் போலி நிருபர் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிரவீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.