கோவை: கோவையில் பேருந்து பயணத்தின் போது, கூலித் தொழிலாளி ஒருவர் பையில் வைத்திருந்த ₹5.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் ‘ஃபெவிக்விக்’ (Fevikwik) பசையை பயன்படுத்தி மிக நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி (50). இவரது மனைவி சாந்தி. நல்லாம்பாளையத்தில் ரவி சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக பணம் தேவைப்பட்டது.
இதனால் ரவி தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் கீழநிலைக்கோட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து தனது சேமிப்புப் பணம் மற்றும் மனைவியின் நகையை அடகு வைத்து பெற்ற பணம் என மொத்தம் ரூ.5.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி இரவு தனியார் பேருந்தில் கோவைக்கு வந்தார். பணத்தை பைக்குள் மறைத்து வைத்திருந்தார்.
அந்த பேருந்து பல்லடம் பகுதியில் நின்ற போது கூட பணம் பத்திரமாக இருப்பதை ரவி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 19 அதிகாலை 4:45 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய ரவி, தனது பையைத் திறக்க முயன்ற போது பையின் ஜிப் (Zip) திறக்க முடியாதபடி வலுவான பசை (Fevikwik) கொண்டு ஒட்டப்பட்டு இருந்தது.
நூதன திருட்டு
பதற்றமடைந்த ரவி அருகில் இருந்த கடையில் கத்தியை வாங்கி, பையை கத்தியால் கிழித்து பார்த்த போது உள்ளே இருந்த ₹5.20 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையின் விசாரணையில், ரவிக்கு பின்னால் அமர்ந்து பயணித்த இரண்டு நபர்களின் கைப்பேசி எண்கள் ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
திருடிய நபர்கள் பேருந்தில் இருந்து இறங்கிச் செல்லும் வரை ரவி பையைத் திறக்க முடியாதபடி அதில் ஃபெவிக்விக் போட்டு ஒட்டி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து பயணியிடம் நூதன முறையில் ஃபெவிக்விக் பயன்படுத்தி ரூ.5.20 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



