கோவை: ஜி டி மேம்பாலத்தில் ‘புல்’ போதையில் நின்றபடியே பைக் ஓட்டி அலப்பறை செய்த குடிமகனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கி.மீ ஜிடி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் அதிவேகமாகச் செல்வதைத் தடுக்க ஏஐ கேமராக்கள் பொருத்திய போலீசார் வாகன ஓட்டிகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்த சூழலில், குடிபோதையில் ஒரு நபர் செய்த காரியம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நேற்று இரவு மேம்பாலத்தின் மீது சென்ற மதுப்பிரியர் ஒருவர், தனது பைக்கை தாறுமாறாக இயக்கியுள்ளார். அப்போது திடீரென இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டும், அங்குமிங்கும் வளைத்தும் போதையில் சாகசம் செய்துள்ளார். பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் இதைக் கண்டு நிலைதடுமாறிப் போயினர்.
அவ்வழியாகக் காரில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள், அந்த நபரை எச்சரித்தும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. இந்த போதை நபரின் சாகசங்களை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து “கோவையில் வாகனம் ஓட்டும் வீரன்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

