கோவை: தொழிற்கழிவுகளை சிறந்த முறையில் மேலாண்மை செய்வது மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றும் வகையில், கண்டுபிடிப்புகளை உருவாக்கிய கோவை மாணவர்களுக்கு இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விருதுகள் வழங்கப்பட்டன.
தொழிற் கழிவு மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் PSG மேம்பட்ட ஆய்வு நிறுவனம் (PSG IAS) இணைந்து, இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி (Young Environmental Scientist) போட்டியை கோவையில் மூன்றாவது ஆண்டாக நடத்தினர். இதில் கோவையில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் குழுக்கள், தொழிற்கழிவுகளை மேலாண்மை செய்வது மற்றும் அவற்றை புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களாக பயன்படுத்துவது ஆகிய தலைப்புகளில் மாதிரி கண்டுபிடிப்புகளை உருவாக்கினர்.
பள்ளி அளவில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு செயல்விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இதில், ஜூனியர் பிரிவில் துடியலூர் வித்யா விகாசினி பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஜிஷ்ணு, பிரதீஷ் மற்றும் கார்த்திக் ஆகியோரின் ஸ்மார்ட் குப்பை தரம் பிரிக்கும் திட்டம் முதலிடத்தைப் பிடித்தது.
சீனியர் பிரிவில், அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவிகள் ஹர்ஷினி மற்றும் ஜானவி ஆகியோரின் மழை நீர் சுத்திகரிப்பு திட்டம் முதலிடத்தைப் பிடித்தது.
வெற்றிபெற்ற மாணவர் குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையை கொடிசியா தலைவர் கார்த்திகேயன், சின்னவேடம்பட்டி தொழிற்சங்கத் தலைவர் தேவகுமார் மற்றும் PSG ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் காஞ்சனா ஆகியோர் வழங்கினர். இதுதவிர, இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஆசிரியர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சின்னவேடம்பட்டி தொழிற்சங்கத் தலைவர் தேவகுமார் பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் தங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வுகளை கண்டறிந்த மாணவர்களின் திட்டங்கள் வியக்க வைப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் மாணவர்களை நோக்கி பேசிய அவர், கோவையில் பல்வேறு பொறியாளர்களை உருவாக்கிய பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களின் வருங்கால வெற்றிக்கு அடித்தளமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சியா தலைவர் தேவகுமார், துணைத் தலைவர் தியாகராஜன், துணைச் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

