கோவை: கோவையில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை சரமாரியாக கத்தியால் குத்து தப்பி சென்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் சங்கனூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் லங்கேஷ்வரி (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது கணவர் கோபிநாத் (35). டிரைவர்.
இவர் வேலைக்கு சென்றால் 15 நாட்கள் கழித்து வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் கோபிநாத் அவரது மனைவி லங்கேஷ்வரியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையே கோபிநாத் வழக்கம் போல வேலைக்கு சென்றார். பின்னர் 15 நாட்கள் கழித்து வீடு திரும்பினார்.
அப்போது கோபிநாத் மீண்டும் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது தகராறாக மாறி உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லங்கேஷ்வரியை சரமாரியாக கை, கழுத்து, முதுகு என சரமாரியாக குத்தினார்.
வலியால் அலறி துடித்த அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து கோபிநாத், லங்கேஷ்வரியை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் அங்கு வந்தவர்கள் லங்கேஷ்வரியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து லங்கேஷ்வரி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கோபிநாத்தை தேடி வருகின்றனர்.