நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி வந்தவர் காளியம்மாள்.
சமூக செயற்பாட்டாளரான இவர், 2018ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து நாம் தமிழர் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
சூறாவளிப் பேச்சு
கூட்டத்தில் காளியம்மாள் பேச்சை கேட்ட, மறைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது, அவரை கட்சிக்குள் கொண்டு வந்தார்.
பின்னர் 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளித்தது. பிரச்சாரத்தில் சூறாவளியை சுழன்ற காளியம்மாள், அரசியல் பேச்சில் சக கட்சிகளை அலறவிட்டார்.

இதனால் தெரிந்த அரசியல் முகமாக மாறினார். கட்சி வேறுபாடுகளை தாண்டி பலரின் பாராட்டுகளை பெற்ற காளியம்மாள், தேர்தலில் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளை பெற்றார்.
2021ல் பூம்புகார் தொகுதியிலும், 2024 தேர்தலில் மயிலாடுதுறையிலும் போட்டியிட்டு வாக்குகளை அதிகமாக பெற்றார். இதனிடையே தான், சீமானுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியில் இருந்து விலகினார்.
காளியம்மாளை சுற்றிய கட்சிகள்
கட்சியில் இருந்து வெளியேறினாலும் நாம் தமிழர் பற்றியோ, சீமானை பற்றியோ எந்த விமர்சனத்தை முன் வைக்காமல் இருந்தார் காளியம்மாள்.

தமிழக அரசியல் கட்சிகள், காளியம்மாளை தங்கள் பக்கம் இழுக்க முனைப்பு காட்டினர். கடைசி வரை அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை. விஜய்யின் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் ஐக்கியம்
இதற்கு காரணம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணி கொடுத்த ஆதரவுதான் என கூறப்படுகிறது. சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அவர் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், 2026 தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வேளை தொகுதி கொடுக்க முடியாமல் போனால், மீனவர் நல வாரியம் போன்ற முக்கியமான வாரியத் தலைவர் பதவி வழங்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

