கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் கல்லாப்பெட்டியை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மளிகை கடையில் பணத்தை திருடி சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை தெற்கு உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் அமீர் (26). இவர் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட் பரபரப்பாக இருந்தது.
அப்போது ரோஷன் அமீர் கடைக்கு பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் கடையில் மீன் வாங்குவது போல நடித்து ரூ. 6,000 இருந்த கல்லாப்பெட்டியை திருடி சென்றார். சிறிது நேரம் கழித்து ரோஷன் அமீர், கல்லாப்பெட்டி காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவருக்கு மீன் வாங்குவது போல நடித்து சென்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை தேடினார். அப்போது அங்கு சுற்றி கொண்டு இருந்த அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து கல்லாப்பெட்டியை மீட்டார்.
பின்னர் அந்த பெண்ணை பெரியகடை வீதி போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அந்த பெண் செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சமீரா (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரோஷன் அமீர் புகாரின் பேரில் வழக்கு பதிந்து, சமீராவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் கோவை செல்வபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் அப்துல் நாசர் (44). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் 2 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் வழக்கம் போல கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் கடையில் பொருட்கள் வாங்குவது போல நடித்து கல்லாப்பெட்டியில் இருந்து ரூ. 9,200-ஐ திருடி சென்றார்.
இதுகுறித்து அப்துல் நாசர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடி சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

