கோவை: கோவை குழந்தைகள் நல குழு (CWC) அலுவலகத்தில் சுகாதாரமற்ற கழிப்பறை, போக்சோ குழந்தைகள் நடந்து அழைத்து வருகிறனர் என்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை குறித்தும் சமூக ஆர்வலர்கள் உடனடி நடவடிக்கை கோரியுள்ளனர்.
கோவை உக்கடம் ஜிஎம் நகரில் குழந்தைகள் நல குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், போக்சோ வழக்கில் சமந்தப்பட்ட குழந்தைகள் அழைத்து வரப்பட்டு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த அலுவலகத்திற்கு தினமும் 30 குழந்தைகள் வரை அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த நிலையில் அங்கு போதிய கழிப்பறை வசதி, இடவசதி, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகள் கடும் சிரமத்திற்குள்ளகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
கோவை உக்கடம் ஜிஎம் நகரில் குழந்தைகள் நல குழு அலுவலகம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படுவதற்காக பல்வேறு இடங்கிளில் இருந்து அங்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அவர்கள் அங்கிருந்து கோவையில் செயல்பட்டு வரும் காப்பகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அழைத்து வரப்படும் குழந்தைகள் அவர்களின் முழு விவரங்கள் பெறப்பட்டு, கோவையில் இடவசதி உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம் ஒரு நாள் முழுவதும் எடுத்து கொள்கிறது.
தினமும் குறைந்தது 20 ஆதரவற்ற குழந்தைகள் வரை அழைத்து வரப்படுவதால் அந்த கால தாமதம் ஏற்படுகிறது. அவர்களுக்கு குழந்தைகள் நல குழு அலுவலக வளாகத்தில் கழிப்பறை வசதி, இடவசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். அது மட்டுமில்லாம் குழந்தைகள் நல குழு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட பெரிய குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை, அழைத்து வரப்படும் குழந்தைகள் பயன்படுத்த தயங்குகின்றனர்.
மேலும், சுகாதாரமற்று, துர்நாற்றம் விசுவதாக குழந்தைகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் குழந்தைகள் உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். கழிப்பறை கதவுகளில் துளைகள் இருப்பதாகவும் குழந்தைகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல 10க்கும் மேற்பட்ட போக்சோ வழக்கில் தொடர்புடைய குழந்தைகள் வழக்கு விசாரணைக்கு 10 நாட்கள் காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும் என விதியுள்ளது.
அவர்களை குழந்தைகள் நல குழு அலுவலகத்திற்கு போலீசார் மற்றும் சமந்தப்பட்ட அதிகாரிகள் நடக்க வைத்தும், இருசக்கர வாகனத்திலும் வெளிப்படையாக அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் பொதுமக்களை பார்க்கும் போது மனவேதனை அடைந்து விடுகின்றனர்.
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளும், ஆதரவற்ற குழந்தைகளும் சாலையில் அழைத்து வரப்படும் போது கூனிக்குறுகி விடுகின்றனர். குழந்தைகள் நல குழு அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவும் தனியார் அமைப்பு கண்காணித்து வருகிறது.
அந்த சிசிடிவி கேமிராவை சமந்தப்பட்ட அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும. அந்த அலுவலகத்தில் உள்ளூர் வாசியை அதிகாரியாக நியமிக்க கூடாது என விதி உள்ளது. ஆனால் பல மாதங்களாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக உள்ளூரை சேர்ந்த பெண் அதிகாரி இருந்து வருகிறார்.
அலுவலகம் அருகே ரயில்வே தண்டவாளம் இருப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஏதாவது காரணத்திற்காக குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தால் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குழந்தைகள் நல குழு அலுவலகத்திற்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதற்கு நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு காண வேண்டும். குழந்தைகளை அழைத்து வர வாகன வசதி எற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.

