கோவை: ஷட்டரை உடைத்து மொபைல் கடையில் 20 செல்போன் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை ஜிஎம் நகரை சேர்ந்தவர் முகமது அலி (43). இவர் ஒப்பணக்கார வீதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு முகமது அலி கடையில் வியாபாரத்தை முடித்து வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வழக்கம் போல முகமது அலி கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர் கடையினுள் சென்று பார்த்த போது விற்பனைக்கு வைத்திருந்த 20 செல்போன்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முகமது அலி பெரியகடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கடைக்கு வந்து அங்கு பதிவாகிருந்த கைரேகைளை பதிவு செய்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து முகமது அலி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையனை தேடி வந்தனர்.
அப்போது கடையின் ஷட்டரை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்து சென்றது பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்த லிங்க பூபதி (35) என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பெரியகடை வீதி பகுதியல் பதுங்கி இருந்த லிங்க பூபதி மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 20 செல்போன்களையும் மீட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

