கோவை: போக்சோ வழக்கில் சிக்கிய மத போதகர் ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். இவர், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று ஆராதனை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவர் 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுக்கு தனது வீட்டில் வைத்து அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் அளித்த புகாரில் காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், 3 தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை தென் மாவட்ட பகுதிகளான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம் அவர் பெங்களூரில் இருந்து வெளிநாடு தப்பி செல்ல முயற்சி செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க காவல் துறையினர் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
அந்த நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, புகைப்படம், பாஸ்போர்ட் தகவல், வழக்கு உள்ளிட்ட விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும்
அவர் விமான நிலையம், துறைமுகத்திற்கு வந்தால் தகவல் அளிக்க வேண்டிய காவல் நிலைய தொடர்பு எண், அதிகாரிகள் விவரங்களும் அடங்கியிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே மதபோதகரை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஜான் ஜெபராஜ் தனக்கு முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.