கோவை: ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக விமானப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கோவையில் டன் கணக்கில் மாம்பழங்கள் தேக்கமடைந்துள்ளன.
கோவை உக்கடம் புல்லுக்காடு மண்டியில் தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் மாம்பழங்கள் வரத்து காணப்படும்.
இந்த மாம்பழங்கள் கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாம்பழ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நல்ல வருமானம் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக கோவையில் இருந்து மேற்காசிய நாடுகளுக்குச் செல்லும் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மாம்பழங்கள் ஏற்றுமதி பாதிப்பு

இதனால், கோவையில் இருந்து மாம்பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மண்டியில் ஏலம் விடப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்யவும், ஏற்றுமதி செய்யவும் சிரமம் ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாக மாம்பழ வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், மாம்பழங்களை உரிய நேரத்தில் அனுப்ப முடியாததால், பழங்கள் சேதமடையும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
Read also: Fish price Coimbatore | கோவையில் மீன்கள் விலை கிடு கிடு உயர்வு
இதுகுறித்து கோவை மாம்பழ வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், “போர் பதற்றம் காரணமாக மாம்பழங்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. நீண்ட நாட்கள் மாம்பழங்களை வைத்திருக்க முடியாது. கெட்டுப்போய்விடும். உள்ளூர் சந்தையிலும் மாம்பழ விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை. இதனால் கோவையில் டன் கணக்கில் மாம்பழங்கள் தேக்கமடைந்துள்ளன.” என்றனர்.

