கோவை: கோவையில் இரவு நேரத்தில் மளிகைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவநாதன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கடையில் இருந்து கரும்புகை வெளியேறி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் கணபதி தீயணைப்பு துறை வீரர்கள் 6 பேர் நிலைய அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்து குறித்து சரவணம்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


