கோவை: கோவையில் தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர் அருகே உள்ள சாஸ்திரி வீதியைச் சேர்ந்தவர் செல்வி (36). இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் செல்வி கணவரை புரிந்தார். அதன் பின்னர் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கார்த்திக் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று செல்வியை கார்த்திக் தாக்கியுள்ளார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது 2 மகள்களும் கார்த்திக்கை தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அருவாளை எடுத்து செல்வி மற்றும் அவரது மகள்களை வெட்டினார்.
இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வடமதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்து செல்வி துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 
                                    
