கோவை: ரூபிக் க்யூப்பில் மூவர்ண கொடியுடன் தேசிய வரைபடம் வரைந்து கோவையை சேர்ந்த பள்ளி சிறுமி அசத்தி உள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர் ஹன்சிதா(12). தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தாயார் சுபாஷினி தொழில்முனைவோர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹன்சிதா ‘ரூபிக் க்யூப்’ எனப்படும் பல வண்ணப் பகுதிகளை கொண்ட முப்பரிமாண புதிர் விளையாட்டுக்கு பயன்படுத்தும் க்யூப்களை கொண்டு, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டின் வரைப்படத்தை மூவர்ண கொடியுடன் கூடிய வடிவத்தை உருவாக்கியுள்ளார்.
இதற்காக அவர் 228 ரூபிக் க்யூப்களை உபயோகித்துள்ளார். இவர் இதே போன்று விநாயகர் உருவம் உள்ளிட்ட பலவற்றை க்யூப்களை கொண்டு உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து ஹன்சிதா கூறுகையில்,
”ரூபிக் க்யூப் கலையின் வாயிலாக நம் இந்திய நாட்டின் வரைப்படத்தை மூவர்ண கொடியுடன் உருவாக்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நம் நாட்டின் மீது எனக்கு உள்ள தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக உணர்வுப்பூர்வமாக இதை செய்துள்ளேன் என்றார்.