கோவை: கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது என விஜயை கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் உருவச்சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஜிடி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தந்தை பெரியாரின் மிக நெருக்கமான நண்பரான ஜி.டி. நாயுடுவின் பெருமையை அங்கீகரிக்கும் வகையில், இந்த அரசு ஜிடி நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்ததாகவும் தற்போது இந்த சிலையையும் திறந்துள்ளதாகவும் இந்த திராவிட மாடல் அரசுக்கும் முதலவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
தமிழ் அறிஞர்களின் பெருமைகளை உணர்த்தும் இந்த ஆட்சி, வரலாற்று ரீதியாகப் பணியாற்றி வருவதால் மீண்டும் இரண்டாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகமே ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் பாஜக கூட்டணியில் சேருவார் என்று சிலர் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது என்று விமர்சித்தார். தனது சொந்தத் திரைப்படத்திற்குப் பிரச்சனை வரும்போது கூட மௌனம் காக்கும் விஜய், திமுகவை மட்டுமே தாக்கி பேசுவதாகவும், பாஜகவைப் பற்றி எவ்வித விமர்சனமும் செய்வதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மோடி அரசின் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய திரிசூல மிரட்டல்களுக்கு அஞ்சி, விஜய் அந்த அரசின் பி-டீம் (B-team) போலச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
ஒன்றிய மோடி அரசு மகளிர் தினப் பரிசாக சிலிண்டர் விலையை உயர்த்தியதுதான் என்றார். மோடி அரசின் வெளியுறவுத்துறை கொள்கை தோல்வியடைந்துள்ளதால் பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் மத்திய அரசு தவறிவிட்டதாகவும், ஒரு நாடு என்ன வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானிப்பது நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்தானது என்றார்.
இறுதியாக, ஜி.டி. நாயுடுவின் பெயரில் உள்ள சாதி அடையாளம் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த கி.வீரமணி, அது சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டியது அல்ல கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பது அவரது பெயரிலேயே இணைந்துவிட்ட ஒன்று என்றும், அப்படி பார்த்தால் ராஜகோபாலாச்சாரியார் அல்லது சங்கராச்சாரியார் என்று அழைப்பதைப் போலவே இதுவும் தவிர்க்க முடியாத ஒரு விதிவிலக்கு என்றும் அவர் கூறினார். எனவே, இதில் விஷமத்தனம் தேடுபவர்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்றார்.

