கோவை: யானையின் சாணத்தில் நெகிழி பாக்கெட்டைகள் இருப்பது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் கால்நடைகளுக்கு வைக்கப்பட்டுள்ள தீவனங்களையும் சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் கணுவாய் தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே காட்டு யானை நடமாட்டம் இருந்து வரும் நிலையில் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் இரவு நேரங்களில் வெளியில் வருவதற்கு அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கணுவாய் அடுத்த தாளியூர் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்த காட்டு யானை ரவி என்பவரது இல்லத்தில் மாட்டிற்காக வைத்திருந்த தீவனங்களை சேதப்படுத்தி உண்டு சென்றுள்ளது. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் யானையை வனப்பகுதிக்குள்ளேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேசமயம் ஊருக்குள் நுழைந்த யானை சுற்றித் திரியும் பொழுது சாணங்களை இட்டுச் சென்றுள்ளது. அந்த சாணத்தில் நெகிழி பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து பயிர்களையும் தீவனங்களையும் உட்கொள்ளும் போது அதில் கிடக்கும் இது போன்று நெகிழி பொருட்களையும் சேர்த்து உட்கொள்கின்றன என்றும் எனவே வனவிலங்கு ஆர்வலர்களும் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள்ளேயே இருக்கும் வகையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

