தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் சம்பவத்தில் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு முழு காரணம் காவல்துறையை பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சர் தான் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பெற்றோரை அலட்சியப்படுத்திய ஆய்வாளர்
இந்த வழக்கில் பெற்றோர் அளித்த புகாரை சரியாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீது திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவி காணாமல் போனதாக அவரது பெற்றோர் முதலில் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். ஆனால் அந்த புகாரை உரிய முறையில் பதிவு செய்து உடனடி விசாரணை மேற்கொள்ளாமல், பெற்றோரிடம் அவதூறாக பேசியும் அலட்சியமாக நடந்துகொண்டதாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரவீனா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ஆரம்ப கட்ட விசாரணை தாமதமானதாகவும், அந்த அலட்சியம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, காவல்துறையின் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஆய்வாளர் சஸ்பெண்ட்
இந்த நிலையில், சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட சரவணன் தலைமையிலான உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெற்றோர் அளித்த புகாரை உரிய முறையில் கவனிக்காதது மற்றும் அலட்சியமாக நடந்துகொண்டது உறுதியானதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்து நெல்லை டிஐஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை காவல்துறையின் செயல்பாடு குறித்து எழுந்த சர்ச்சைக்கு இடையே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாணவி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் குறித்து முழுமையான உண்மை வெளிவர வேண்டும் என பொதுமக்களும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

