பொள்ளாச்சி பாலியல் கொடுமை; தீர்ப்பு தேதி அறிவிப்பு!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு பல பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரத்தனம் அம்பலமானது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் கெஞ்சும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தது.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தது.

இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வந்தது.

விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணையில் பங்கெடுத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த (ஏப்ரல் 5) ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது. ஒவ்வொரு நபரிடமும் சுமார் 50 கேள்விகள் வரை கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் வரும் மே 13ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Recent News

Latest Articles