கோவை: பள்ளிகளில் டெண்டர் எடுத்து தருவதாக முட்டை வியாபாரிடம் ரூ.7.80 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (52). அவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு பாஸ்கரனுக்கு, ஸ்டீபன் என்பவர் அறிமுகமானார். அவர், பாஸ்கரனிடம் அரசு பள்ளிகளில் முட்டை விநியோகம் செய்ய டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும், சேலத்தில் உள்ள தனக்கு தெரிந்தவர்கள் மூலம் டெண்டர் எடுத்து தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு பாஸ்கரன் சமதம் தெரிவித்து டெண்டர் எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 5 தேதி ஸ்டீபன் போனில் பாஸ்கரனை அழைத்து டெண்டர் தயாராகி விட்டதாகவும், சேலம் வந்து பெற்று கொள்ளும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து பாஸ்கரன் சேலம் சென்றார்.
அங்கு ஸ்டீபன் டெண்டர் ஆவணங்களை கொடுத்து ரூ. 7 லட்சத்து 80 ஆயிரத்தை டெண்டர் தொகை செலுத்த வேண்டும் என்றுள்ளார். இதை தொடர்ந்து பாஸ்கரன் ரூ. 5 லட்சத்தை ஸ்டீபனிடம் கொடுத்தார்.
மீதி தொதை ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை ஸ்டீபன் தெரிவித்த பிரின்சி தெரசா என்பவரது வங்கி கணக்கில் செலுத்தினார். அதன் பின்னர் பாஸ்கரன் டெண்டர் ஆவணங்களை எடுத்து கொண்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சத்துணவு திட்ட அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு அந்த ஆவணங்களை கொடுத்து தகவல்களை கேட்டார். அப்போது அந்த ஆவணங்களை பார்த்த அதிகாரிகள், அது போலி டெண்டர் ஆவணங்கள் என தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் உடனே ஸ்டீபனை தொடர்ப்பு கொண்டு தகவலை தெரிவித்து, தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். இதனால் பாஸ்கரன் கோர்ட் மூலம் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் ஸ்டீபன், அவரது கூட்டாளிகள் பிரின்ஸ், பிரின்சி தெரசா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

