கோவை: திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்று திமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சவால் விடுத்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்றது. அதில் அமைச்சர் வேலுமணி மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ஒட்டுமொத்த மக்களும் திமுக சுத்தமாக இருக்கக் கூடாது என்று நினைத்து விட்டார்கள் என்றும் ஐந்து ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு திட்டமும் வரவில்லை என்றார். விளம்பரத்தில் மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறது என்றும் விமர்சித்தார். இங்குள்ள கல்லூரி அரசு மருத்துவமனை ஆகியவை அதிமுக ஆட்சியில் கட்டிக்கொடுத்து எனவும் ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை கொண்டு வந்ததுடன் அனைத்து சாலைகளையும் போட்டுக் கொடுத்ததாகவும் தோட்டத்திற்கு செல்லும் சாலைகள் கூட போட்டு கொடுத்ததாக குறிபிட்டு அனைத்து பாலங்களையும் கட்டிக் கொடுத்ததாகவும் பட்டியலிட்டார்.
மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறுவாணி சாலையை இன்றுவரை போட்டுக் கொண்டுள்ளனர் கோவைக்கு எதுவும் செய்யாமல் இன்று திமுகவினர் நாங்கள் தான் செய்தோம் என விளம்பரம் செய்வதாக தெரிவித்தார். இதே இடத்தில் மேடை போட்டு ஏதாவது ஒரு திட்டம் நாங்கள் போட்டிருக்கிறோம் என்று திமுக வினர் சொல்லட்டும் நாங்கள் அதை கேட்கிறோம் எனவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது 50 கோடி ரூபாய்க்கு தனித்திட்டமாக அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்தை தொண்டாமுத்தூருக்கு செயல்படுத்தியதாகவும் இரண்டாம் குடிநீர் திட்டம் தங்களால் கொண்டுவரப்பட்டு திமுகவினரால் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எத்தனையோ பாலங்களை கட்டினோம் கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு இல்லாத வளர்ச்சியை கொடுத்த உரிமையோடு இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகளை கேட்கிறோம் என்றும் குறிப்பிட்டார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவையில் குளங்களை சீரமைத்தோம் ஆனால் அதை இன்று சுத்தம் கூட செய்வதில்லை என்றும் எதையுமே செய்யாமல் ஐந்து ஆண்டுகளை திமுகவினர் ஓட்டிவிட்டனர் என்றும் எந்த வளர்ச்சியையும் கொடுக்காமல் சொத்து வரி உயர்வு,மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு என அனைத்து பொருட்களின் விலையை உயர்த்தியதுடன் யாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் பெண்களுக்கு மொத்தமாக பாதுகாப்பு இல்லாத நிலை உருவாக்கி விட்டதாகவும் காவல்துறையினர் வேலை செய்கிறார்களா என்பதே தெரியவில்லை என்றார்.
தற்போது எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும் நமது பகுதியிலேயே வாரத்திற்கு ஒரு கொலை நடக்கிறது ,இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் 18 வயது முதல் பாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை பால் விலை எவ்வளவு இருந்தது கட்டுமான பொருட்கள் விலை எவ்வளவு இருந்தது எண்ணெய் பருப்பு போன்றவற்றின் விலை எவ்வளவு இருந்தது என பெண்கள் வீட்டிற்கு போய் கணக்கு போட்டு பார்க்க வேண்டும் எனவும்
தற்பொழுது திமுக ஐந்தாயிரம் போட்டுவிட்டேன் மூன்றாயிரம் போட்டுவிட்டேன் மாத மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று கூறுகிறார்கள் என்றார்.
தான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது எவ்வளவோ வீடுகளை கட்டித் தந்த நிலையில் இன்று ஒரு வீடு கூட கட்டி தரப்படவில்லை என்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 லட்சம் முதல் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டுதான் நான்காயிரம் ஐந்தாயிரம் ரூபாயை அரசு கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை எனவும் திமுக காரனுக்கு ஒன்று சொல்கிறேன் நீ ஐந்தாண்டுகள் ஒன்றும் செய்யவில்லை இத்தனை திட்டங்களை செய்து இருக்கிறோம் என்று நான் சொல்கிறேன் தைரியம் இருந்தால் திட்டத்தைச் சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும் சவால் விடுத்தார்.

