பணத்தை சேமிக்கும் அவசியம் மற்றும் அதன் வழிமுறைகள் குறித்த இரண்டாவது தொகுப்பிற்கு உங்களை வரவேற்கிறோம்.
பணத்தை சேமிப்பதில் சிக்கனம் என்பதும் முக்கிய காரணையாக விளங்குகிறது. சிக்கனமாக செலவு செய்து சேமிக்கும் போது உங்களிடம் உள்ள செல்வம் பெருகும்.
Table of Contents
சிக்னம்
சின்னச்சின்ன விஷயங்களில் கூட சிக்கனத்தைக் கடைபிடியுங்கள். மின்சாரம், தண்ணீர், இணையம் போன்ற மாதாந்திர செலவுகளை கட்டுப்படுத்துவது இந்த சிக்கனத்தில் அடங்கும். இது பணத்தை சேமிக்க உதவும்.

தேவையில்லாமல் விளக்குகள் அல்லது மின்சாதனங்களை பயன்படுத்துவதை குறைத்தால் மின்சார கட்டணமும் குறையும். இதேபோலவே தினசரி வாழ்க்கையில், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது சிறிய அளவிலாவது பணத்தை சேமிக்க உதவும்.
Fixed Deposit
வங்கிகளில் நிரந்தர வைப்பு (Fixed Deposit), மீளும் வைப்பு நிதி (Recurring Deposit) ஆகிய சேமிப்புத் திட்டங்களை பயன்படுத்துவது பணத்தை சேமிக்க ஒரு நல்ல வழி. இவ்வாறு திட்டமிட்டு சேமித்தால் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், அதற்கு வட்டி வருமானமும் கிடைக்கும். நீண்ட கால இலக்குகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்வதும் எதிர்கால நிதி பாதுகாப்புக்கு உதவும்.
ஒவ்வொருவரும் தங்களுக்கான அவசர நிதியை (Emergency Fund) உருவாக்குவது மிகவும் முக்கியம். உடல்நலப் பிரச்சினைகள், வேலை மாற்றம் அல்லது எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நேரத்தில் இந்த நிதி உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
மூன்று முதல் ஆறு மாத சம்பளத்திற்கு சமமான தொகையை நீங்கள் அவசர நிதியாக வைத்திருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கடன்
கடன் வாங்கும் பழக்கத்தை கவனமாக கையாளுங்கள் வாசகர்களே. இது உங்கள் பொருளாதாரத்தையும், மரியாதையையும் அதளபாதாளத்திற்குக் கொண்டு செல்லக் கூடியது.
வங்கி அல்லது தனியாரிடம் கடன் எடுப்பதை கூடுமான வரியயில் தவிர்த்திடுங்கள். குறிப்பாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது அளவுக்கு மீறி செலவழிக்கவே கூடாது.
நீங்கள் ஒரு கணக்கிட்டு, கிரெடிட் கார்டை பயன்படுத்துவீர்கள். அது எப்போதும் போல இருக்காது. திடீரென எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும்.
இதனால், நிதிச்சுமை ஏற்படும் காலகடத்தில் உங்களால் அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உருவாகும். அப்போது அதிக வட்டியைச் செலுத்தும் நிர்பந்தம் உங்களுக்கு ஏற்படும். தேவைக்கு அதிகமான அல்லது ஆடம்பரப் பொருட்களை எப்போதும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்காதிர்கள் என்பதை மிகவும் எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறோம்.
குடும்பம்
ஒரு கை தட்டினால் ஓசை வராது என்ற கூற்றுக்கேற்ப, குடும்பமாக சேமிப்பைக் கற்றுக் கொள்ளுங்கள். சிக்கனம் குறித்து உரையாடுங்கள். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் சேமிப்பு மற்றும் சிக்கனம் குறித்த விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும்.

சேமிப்பின் அவசியத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இளம் வயதினருக்கு இதன் முக்கியத்துவம் குறித்து புரியவையுங்கள். கொஞ்சம் சிரமம் தான். ஆனால், சரியான நேரத்தில் அவர்கள் புரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்கும்போதோ அல்லது, அந்த மனநிலையை நீங்களாக ஏற்படுத்தியோ, அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
ஒரு நாளில் கிடைக்காது
பணத்தை சேமிக்கும் பழக்கம் என்பது ஒரிரு நாட்களிலோ, வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ வந்துவிடாது. பொறுமையாக இருங்கள். கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுங்கள். திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
நிச்சயமாக வாசகர்களே நிலையாக சேமிக்கத் தொடங்குங்கள். சில ஆண்டுகளில் உங்கள் சேமிப்பும், சிக்கனமும் உங்களை ஒரு செல்வந்தராக மாற்றும்.
சேமிப்பு குறித்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை அவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்…
பகுதி 1-ஐ இங்கே படியுங்கள்…

