கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த 6 மாதத்தில் 1.15 கோடி மதிப்புள்ள உயர் ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொழில் நகரமான கோவைக்கு பணி நிமித்தம் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதில், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு ஒரு சில இடங்களில் இருந்து நேரடியாக விமான சேவை இல்லாததால், கேரளாவைச் சேர்ந்த பயணிகள் கோவை விமான நிலையம் வந்து செல்வதும் அதே போல், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் கோவை வழியாக மீண்டும் நாடு திரும்புவதும் வழக்கமாகும்.
அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கம், அரிய வகை விலங்குகள், பறவைகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால், சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசார் அவ்வப்போது விமான நிலையத்தில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களில் வெளி நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ல் (DJI Air 3S, Mini 4 Pro, Mavic 3 Pro, Avata 2, DJI Flip ) என ரூபாய் 1.15 கோடி மதிப்புள்ளான உயர்ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

