எர்ணாகுளம்- பெங்களூரு ரயிலில் தமிழ் பெயர் பலகை இல்லை- கோவையில் தமிழ் பலகை வைக்க முயன்றவர்கள் கைது…

கோவை: எர்ணாகுளம்- பெங்களூர் இண்டர்சிட்டி ரயிலில் தமிழில் பெயர் பலகை இல்லாததால் ரயில் பெட்டியில் தமிழ் பெயர் பலகையை வைக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்…

எர்ணாகுளம், பெங்களூரு இன்டெர்சிட்டி ரயில் தமிழ்நாட்டு வழியே இயக்கப்படுகிறது. சுமார் 300 கிமீ தமிழ்நாட்டிற்குள் அந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த ரயில் பெட்டியில் கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி பலகை இல்லாததால் தமிழ் புறக்கணிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டி கோவையில் தமிழ் பெயர் பலகை வைக்கும் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டனர்.

கோவை மத்திய ரயில் நிலையம் முன்பு திரண்ட அவர்கள் திட்டமிட்டு தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் பாஜக அரசு புறக்கணித்து இருக்கிறது என முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து எர்ணாகுளம் பெங்களூரு ரயில் மதியம் கோவை ரயில் நிலையத்துக்கு வந்த போது ரயில் பெட்டிகளில் தமிழில் பெயர் பலகைகளை வைக்க ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 20 க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதனால் ரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Recent News

Video

Join WhatsApp