கோவை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சரானால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கோவை விமான நிலையம் பின்புறமுள்ள காலி இடத்தில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். அப்பொழுது மேடையில் பேசிய நிர்வாகிகள் திமுக அரசையும் முதலமைச்சரையும் விமர்சித்தனர்.
குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக கூறிய அவர்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சரானால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர்.
இது குறித்து பேட்டியளித்த கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் சம்பத் கடந்த நான்கு வருடங்களாக இந்த ஆட்சியில் எந்த நன்மைகளும் மக்களுக்கு செய்து தரப்படவில்லை என்றும் 66% பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

மூன்று பேரை சுட்டுப் பிடித்த விஷயம் வரவேற்கப்பட்டாலும் தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுவதாக தெரிவித்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு இந்த கட்சி சோர்வடைந்து விட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு அந்த கருத்து தவறான கருத்தை என்றும் அந்த மக்களுக்காக நாங்கள் இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமைதியாக இருந்தோம் சோர்வடையவில்லை என தெரிவித்தார்.
அதிமுக கட்சியினர் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பெப்பர் ஸ்பிரே போன்றவற்றை வழங்கி வருவது குறித்தான கேள்விக்கு அவர்களுடைய விருப்பம் என்றும் நாங்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறோம் என கூறினார்.


