கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி, ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சாவித்திரி. இவர் மாநகராட்சி 86வது வார்டில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகள் சௌமியா(13). இவர் கோவை கெம்பட்டி காலனியில் உள்ள தனது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கியிருந்து, அருகே உள்ள மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து சௌமியா பாட்டி வீட்டுக்கு வந்தார். பின்னர் அறிவொளி நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஆட்டோவில் செல்வதற்காக கெம்பட்டி காலனி பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மாணவி மீது மோதியதி, அவரை இழுத்துச் சென்றது. அப்போது சிறுமி அருகில் இருந்த கல்லில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி உயிரிழந்ததை அறிந்த சக பள்ளி மாணவிகள் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்து கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Comments are closed.