கோவை:கோவை வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில், ரூ.4.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரசாமி, கணபதி ராஜ்குமார் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
கோவை மாநகராட்சி வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ. 4.13 கோடி மதிப்பில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம் கட்டப்பட்டுள்ளது. இதில், 50 எண்ணிக்கையிலான தெருநாய்கள் அடைக்கும் கூண்டுகள், கால் நடை மருத்துவர் அறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதனை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரசாமி, கணபதி ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காந்திஜி சாலை பகுதியில் உள்ள குறிச்சி மாநகராட்சி பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம், ஆசாத் நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக கடை, பாலு கார்டன் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக கடைகளை பொள்ளாச்சி எம்பி., ஈஸ்வர சாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும் பி.கே.புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், ஸ்ரீராம் காலனி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக கடை என மொத்தம் ரூ. 5.50 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் அவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து தெற்கு மண்டலம் பகுதியில் ரூ.73.10 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் கான்கிரீட் சாலைகள் சீரமைக்கும் பணி மற்றும் சுகுணாபுரம் பெத்தேல் ஆரம்ப பள்ளியில் ரூ.65.50 லட்சம் மதிப்பில் புதிய ஸ்மார்ட் ஆய்வகம் அமைக்கும் பணி என ரூ.1.38 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளையும் எம்பி., ஈஸ்வரசாமி துவக்கி வைத்தார்.



