கோவை: வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற பக்தர் ஒருவர் முதலாவது மலையில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வனத்துறை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை சென்ற பக்தர் ஒருவர் திருநீறு மலை அருகே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில், மீண்டும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதியவர்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 60) என்பவர் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். அப்போது முதல் மலையிலேயே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் டோலி தூக்கும் சுமை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுயநினைவின்றி இருக்கும் நபரை மீட்டு டோலி மூலம் எடுத்து கொண்டு பூண்டி அடிவாரம் நோக்கி வந்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செந்தில்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் தொடர்ச்சியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகும் சம்பவங்களால் பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.



