கோவை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டி வானதி சீனிவாசன் கந்தசஷ்டி கவசம் பாடி வேண்டிக்கொண்டார்.
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வேண்டி இன்று பல்வேறு மாவட்டங்களிலும் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் சார்பில் கோவில்களில் கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி கோவையில் கடலைக்கார தெருவில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பெண்கள் பலரும் கந்த சஷ்டி கவசம் துதித்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மாநில அரசாங்கம் நிறைவேற்றாமல் இருக்கிறது, எந்த முகாந்திரமும் இல்லாமல் திமுகவினர் அதனை தடுத்து நிறுத்திய உள்ளார்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று பொய் காரணத்தை கூறி தடுத்து நிறுத்தி உள்ளார்கள் என்றார்.
திமுக அரசுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்றும், தமிழகம் எப்போதும் தெய்வீக மண் நம்முடைய கோவில்களும் கலாச்சாரமும் தான் தமிழர்களின் அடையாளம் என கூறிய அவர் தமிழ்நாடு சின்னமும் கோபுரம் தான் அதனை தான் நம்முடைய முன்னோர்கள் வைத்துள்ளனர் என்றார். மேலும் அந்த கோபுரம் என்பது ஒரு கோவிலின் அடையாளம் என்பதை தாண்டி தமிழகத்தின் அடையாளமாக இருக்கிறது என்றார்.
தமிழர்களின் அடையாளங்களை அழிக்கின்ற விதமாக திராவிட மாடல் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் திமுகவினரின் நோக்கமே இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக் கூடாது என்பது தான் அது அவர்களின் ரத்தத்தில் ஊறியது என்றார்.
ஆட்சி அதிகாரம் செய்ய முடியாததை கூட ஆண்டவனிடம் முன்வைக்கின்ற பிரார்த்தனை என்பது செய்து முடிக்கும் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உள்ளது, ஆன்மீக நம்பிக்கையை எந்த அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
ஊழல்வாதிகளை மிரட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு இவ்வளவு பேசும் முதலமைச்சர் அவரது அமைச்சரவை சகாக்கலான கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை நாட்கள் ஆகிறது? அதெல்லாம் ஊழலாக தெரியவில்லையா? என கேள்வி எழுப்பினார். எனவே முதல்வர் அவரது அருகில் இருப்பவர்களை எல்லாம் பார்த்துவிட்டு பேசினால் நியாயமாக இருக்கும் என்று மக்களும் நினைப்பார்கள் என்றார்.
மேலும் ஊழல் வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கும் அமைச்சர்களை வைத்துக் கொண்டும் ஊழல் குற்றச்சாட்டிற்காக பதவியில் இருந்த அமைச்சரை வீட்டிற்கு அனுப்பிய பெருமைக்குரிய முதலமைச்சர் தான் ஸ்டாலின் என கூறிய அவர் இது போன்று பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் கிடையாது என்றார்.
விஜய் இன்று திமுக பற்றி விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு விஜய் புது புது வார்த்தைகளை வைத்து பேசினாலும் அல்டிமேட்டாக திமுகவை வீழ்த்தப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான். மேடை ஏறலாம் வசனம் பேசலாம் கூட்டத்தையும் கூட்டிக் காட்டலாம் வாக்குகள் விழுவது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் ஏனென்றால் திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் உள்ளது என பதில் அளித்தார்.

